விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 2007
- பெப்ரவரி 4
மயில்கள், பசியானிடே குடும்பத்தின், பேவோ இனத்திலுள்ள இரண்டுவகைகளைக் குறிக்கும். மயில்கள், ஆண்மயிலின் ஆடம்பரமான தோகைக்காகப் பெயர் பெற்றது. மயில் இந்தியாவின் தேசியப்பறவை ஆகும். ஆங்கிலத்தில் Peacock எனப்பெயர் வரக் காரணம் : தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து மயில் தோகையை இறக்குமதி செய்து வந்தனர் அரேபியர். தமிழ் தோகை, அரபிய மொழியில் tawus ஆகியது. அங்கிருந்து கிரேக்கத்திற்கு சென்ற மயில் தோகை, அங்கு pfau ஆக மாறியது. அது லத்தீன் மொழியில் பேவோ ஆக மாறியது. அதிலிருந்து ஆங்கிலத்தில் பேவ் எனவும், பின்னர் Peacock எனவும் மருவியது. |
- பெப்ரவரி 5
டூக்கான் பறவை அல்லது பேரலகுப் பறவை என்பது கண்ணைக் கவரும் அழகிய நிறங்களைக் கொண்ட மிகப்பெரிய அலகுடன் இருக்கும் வெப்ப மண்டல அமெரிக்கப் பறவை இனமாகும். நடு அமெரிக்கா, தென் அமெரிக்காவின் வடபுறம் வெப்ப மண்டல அமெரிக்கா எனப்படுகின்றது. இப்பறவை நிலத்தில் வாழும் குயிலும் பறவை இனத்தைச் சேர்ந்தது. இவைகளில் சுமார் 21 இனம் கொலம்பியா நாட்டிலும், சுமார் 17 இனங்கள் பிரேசில், வெனிசூலா, ஈக்வெடார் போன்ற நாடுகளில் வாழ்கின்றன. அலகு பார்ப்பதற்குப் மிகப்பெரிதாக இருந்தாலும், அதிக கனம் கொண்டதல்ல. ஏனெனில், அதில் நிறைய காற்றறைகள் உள்ளன. |
- பெப்ரவரி 6
வௌவால் பறக்கவல்ல முதுகெலும்புள்ள ஒரே பாலூட்டி விலங்கு. இதனை வவ்வால் என்றும் வாவல் என்றும் அழைப்பர். இவ்வினத்தில் 1000க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. பாலூட்டிகளில் இவை மட்டும் 20% இருக்கலாம் என்று கருதப்படுகிறது. வகைப்பாட்டியல் அறிஞர்கள் வௌவால் இனத்தை கைச்சிறகிகள் எனும் வரிசையில் வைத்துள்ளனர். இவற்றின் முகம் நரியின் முகம் போலும் இருப்பதால் ஆங்கிலத்தில் இவற்றைப் பறக்கும் நரி என்றும் அழைப்பர். பெரும்பாலும் இவை இரவு நேரங்களிலேயே பறந்து திரிந்து உண்டு வாழ்கின்றன. |
- பெப்ரவரி 7
லெமூர் என்பது குரங்குக்கு இனமான ஒரு விலங்கினம். இது ஆப்பிரிக்காவின் தென் கிழக்கே உள்ள மடகாஸ்கர் என்னும் தீவில் வாழ்கின்றது. லெமூர் பார்பதற்கு நாயின் முகத்தோடு கூடிய குரங்கினம் போல தெரியும். படத்தில் வரிவால் லெமூர் காட்டப்படுள்ளது. லெமுர்களும் முதனி என்னும் உயிரின உட்பிரிவைச் சேரும் ஆனால் வாலிலாக் குரங்கு இனத்தில் இருந்து வேறுபட்ட கிளையினம். கொரில்லா, சிம்ப்பன்சி, போனபோ, ஒராங்குட்டான் ஆகிய ஐந்து வாலில்லாக் குரங்குகளையும் பெரிய மனிதக்குரங்கு இனம்(simian, apes) என்றும், இந்த லெமூர்களை குரங்கின்முன்னினம் (prosmian) என்றும் வகைப்படுத்துகிறார்கள். |
- பெப்ரவரி 11
பனை ஒரு மரம் என்று தமிழில் வழங்கப்படினும், தாவரவியல் ரீதியில் புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இதன் தாவரவியற் பெயர் பொராசஸ் பிலபெலிபேரா என்பதாகும். பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை; இயற்கையில் தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும். அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. அரிதாக சில இடங்களில் கிளைகளுடன் கூடிய பனைகளும் தென்படும். இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 - 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும். படத்தில் இரு பனை மரங்களின் உச்சிகள் காட்டப்பட்டுள்ளன. |
- பெப்ரவரி 13
கொலோசியம் என்பது, தொழில்முறைப் போர்வீரர்கள், தங்களுக்குள்ளும், விலங்குகளுடனும், பயங்கரமான குற்றவாளிகளுடனும், சண்டையிடுவதற்காகக் கட்டப்பட்ட ஒரு அரங்கம் ஆகும். பண்டைய ரோமப் பேரரசின் தலைநகரான ரோம் நகரில் உள்ள இது ஒரு நீள்வட்ட வடிவமான கட்டிடம் ஆகும். இதற்குக் கூரை கிடையாது. இக் கட்டிடத்தின் மத்தியில் உள்ள களத்திலேயே நிகழ்ச்சி நடக்கும். யாராவது ஒருவர் இறக்கும் வரையில் பயங்கரமான சண்டை நிகழ்வதுண்டு. இதனைப் பார்ப்பதற்காகக் கூடும் மக்கள் இருப்பதற்காக நடுவில் உள்ள களத்தைச் சுற்றி வட்டம் வட்டமாகப் படிகள் அமைந்திருக்கும். |